Pages

20 June 2007

பர்தாவைப் பிடித்திழுக்கும் பிரதிபா படீல்

ந்திய ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி.பிரதிபா படீல், "இந்தியப் பெண்கள் பர்தா அணிவது மடமை; இப்பழக்கம் முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து பெண்களைக் காத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்டது. தற்போது நாம் சுதந்திர இந்தியாவில் வாழ்கிறோம். ஆகவே இப்பழக்கத்தை கைவிட வேண்டும்!" என்று சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த கருத்தரங்கில் உரையாற்றியுள்ளார்.


ராஜஸ்தானில் ஆளுநராக இருந்தபோது பா .ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்றத் தடை சட்டத்தை கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி, பலரின் புருவங்களை உயர்த்திய பெருமை திருமதி. பிரதிபா படீலுக்கு உண்டு. முதன் முதலாக ஒரு பெண்ணை ஜனாதிபதியாகப் பெறவிருக்கும் அருமையான சூழலில் திருமதி. பிரதிபா பட்டீலின் இப்பேச்சு தேவையற்றது என்றே பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

பர்தாவைப் பற்றிய உண்மையான வரலாறு சார்ந்த தகவல்களை அறியாமல், பரிவாரங்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போல் சம்பந்தமே இல்லாமல் மொகலாயர்களைப் பர்தாவுக்குத் தொடர்பு படுத்தி இருப்பதை அவருடைய அறியாமை என்பதா அல்லது இஸ்லாமிய விரோதம் என்பதா?

மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகள் பதவிக்கு போட்டியிடும் ஒருவரிடமிருந்து, இரண்டாவது பெரும்பான்மையாக இருக்கும் இந்திய முஸ்லிம்களின் பழக்கத்தைப் பற்றி விமர்சிப்பது எந்த வகையில் அவரின் தரத்தை உயர்த்தும்?

இஸ்லாம் உலகில் பரவலான கி. பி ஆறாம் நூற்றாண்டில் என்பதும் முகலாயர்களின் இந்திய வருகை பதினான்காம் நூற்றாண்டுகளிலிருந்து தொடங்கியது என்பதும் நன்கு அறியப்பட்ட வரலாறு. இந்த வரலாற்று உண்மையை அறியாமல், முற்போக்காகப் பேசுகிறோம் என்று மூக்குடைபடுவது தேவையா?

"பண்டைய இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் கவுரவமாகவே இருந்துள்ளார்கள்" என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சித்துள்ளார் திருமதி. பிரதிபா படீல். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழக முதலமைச்சரின் வாழ்த்துக் கவிதை, பண்டைய இந்தியாவில் பெண்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்ற உண்மையை போட்டுடைக்கிறதே!

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி; நாணம்,அச்சம்,மடம்,பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;...

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல் அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு-என்று
அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப் புனலிடை அவள் உடலைக் கழுவி அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து...

அண்டை மாநிலமான கேரளாவில் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்டிருந்ததும் ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் 'சதி' எனும் உடன்கட்டை ஏ(ற்)றும் துர்ப்பழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பதும் முதல் குடிமகளாக வரவிருக்கும் பிரதிபா படீலுக்குத் தெரியதா? அவற்றையும் பெண்கள் கைவிட முன்வரவேண்டும் என்று சொல்லத் தடையாக இருந்தது எது என்றும் விளக்குவாரா?

முற்காலத்தில்? 'பர்தா' அணியும் பழக்கம் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ஏற்றுக்கொண்டது என்று வைத்துக் கொண்டாலும், அதனைக் கைவிடுவதால் இந்தியப் பெண்கள் அத்தகைய அச்சுறுத்தல்களிலிருந்து தப்பி விடுவார்கள் என்று அர்த்தமா? தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் உலகநாடுகளின் சராசரியை விட அதிகம். இதற்கெல்லாம் திருமதி . பிரதீபா என்ன பதில் வைத்திருக்கிறார்?

மாநில ஆளுநராக இருந்துகொண்டிருக்கும் இந்த நிமிடம்வரை அவரும்கூட தலையை மூடிக் கொண்டு மடமையான பர்தாவுடன்தானே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்! பர்தா அணிந்தாலும் பெண்கள் முன்னேறுவதற்கு எவ்வித இடையூறும் இருக்காது என்பதற்கு தானே முன்னுதாரணமாக இருந்து கொண்டு முரண்பாடாகப் பேசுவதற்கு இவருக்கு ஏற்பட்ட நிர்ப்பந்தம்தான் என்னவோ? பர்தா அணிந்து பிரதமராக மிளிர்ந்த இந்திரா காந்தி, பங்களாதேஷ் சேக் ஹசீனா, கலீதா ஜியா, பாகிஸ்தான் பேனசீர் புட்டோ இவர்களெல்லாம் சிறப்பாக ஜொலிக்க வில்லையா?

அரசியல்வாதிகள் தவறாக அறிக்கை விடுவதும், அதனால் பிரச்சினை எழுந்தால் சம்பந்தப்பட்ட கட்சிகள் "அவரின் தனிப்பட்ட கருத்து" என்று சப்பைக் கட்டுவதும், தங்கள் அறிக்கைகள் "தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுது" என்று நழுவுவதும், "நான் அப்படிச் சொல்லவே இல்லை ; பத்திரிக்கைகயாளர்கள்தான் திரித்து எழுதி விட்டார்கள் " என்று பல்டி அடிப்பதும்தான் நடைமுறை. இதில் ஏதாவது ஒன்றைச் செய்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வாழ்த்துக்கள் திருமதி .பிரதிபா படீல் அவர்களே!

பின்குறிப்பு: 2002 இல் குஜராத்தில் முஸ்லிம்களை நரேந்திரமோடி தலைமையில் நரவேட்டையாடி முடித்த பின்னர், மாஜி பிரதமர் வாஜ்பாய் , "இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பேன்?" என்று புலம்ப வைத்த சூழலில் மதசார்பற்ற அரசு என்று காட்டிக் கொள்ள கைகொடுத்த ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அன்று சொல்லப்பட்ட தகுதிகள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன; எதிர் அணியினர் முன்மொழிந்தார்கள் என்று ஈகோ பார்க்காமல் அவரையே முன்னிருத்தலாம்.

"இல்லை! இல்லை!! இது பெண்கள் யுகம்!" என்று சமத்துவ முழக்கமிடுபவர்கள் , சென்ற முறை அப்துல் கலாமுக்கு இணையாக கம்யூனிஸ்ட்டுகளால் நிறுத்தப் பட்ட கேப்டன் லெட்சுமி சேய்காலையும் பரிசீலிக்கலாமே!

நன்றி: நல்லடியார்

1 comment:

அபூ ஸாலிஹா said...

சோதனைப் பின்னூட்டம்-1. ஹாலோஸ்கேனுக்காக!