Pages

14 February 2010

மறைபொருள் குறும்பட விமர்சனம்!


"மறைபொருள்" என்ற பெயரில் பொன்.சுதா தயாரித்திருந்த குறும்படத்தை நண்பர் ஒருவர் மின் அஞ்சலில் அனுப்பியிருந்தார்.

சுட்டி: http://www.youtube.com/watch?v=O9Ukt5-rXls&NR=1

அதனைப் பற்றிய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.



அழகான கவிதை போன்று இப் படத்தைக் கொடுத்துள்ள பொன்.சுதா - விற்கு முதலில் வாழ்த்துக்கள்! டெக்னிலாக ஓரிரு குறைகள் கண்ணில் பட்டாலும் கருப் பொருளுக்குத் தொடர்புடைய, மனதில் தோன்றிய சில கருத்துக்களை மட்டும் இங்கே முன்வைக்கிறேன்.

உடை உடுத்துவதற்கு ஒவ்வொரு சமூகத்தினரும், நாட்டவரும் மாறுபட்ட அளவுகோல்களை நிர்ணயித்துள்ளனர் என்பதை நன்கு அறிவோம்.

நடக்கும் போது கால் இடைவெளியில் தொடை தெரிவதால் வேட்டி கட்டி நாம் கம்பீரமாக நடப்பதையும், மேலே இறுக்கமான Vest / ஜாக்கெட் மற்றும் வயிற்றுப் பகுதி , முதுகு வெளியே தெரிய நம் பெண்கள் புடவை அணிவதையும் "ஆபாச உடைகள்" என்று நக்கல் அடிப்பர் இந்தியாவின் வட மாநிலத்தினர்.

அதே நேரத்தில் நாகரீக உடை என்று கருதி மேற்கத்தியர் அணியும் ஸ்கர்ட்டை நம் பெண்கள் அணிந்தால் "ஆபாசமாகக் கால்கள் தெரிகின்றன..." என்போம். ஆபாசம் பார்வைக்கு பார்வை வேறுபடுகின்றன. அதே போன்று உடைகளின் அளவு கோலும்...

ஆனால், உலக அளவில் எல்லோருக்கும் பொதுவான temperament ஒன்று உள்ளது. ஆணொருவன் பொது இடங்களுக்கு தன் மனைவியையோ, சகோதரியையோ அழைத்துச் செல்லும் போது எவனோ ஒருவன் அவர்களைத் தவறான இடத்தில் உற்றுப் பார்த்தால் மட்டும் "மனிதனின் பார்வை மோசமானது" என்பதை உணருவோம். ஆத்திரம் எழும் அதே வேளையில் தப்பெண்ணத்தை தடுக்க, நம் தரப்பில் மறைப்பை நாடுவோம். இது தான் மனித இயல்பு! ஹிஜாப் என்ற திரையும் இதைத் தானே சொல்கிறது?

குறும்படத்தில் வரும் பெண், பொறுமையாக நேரம் எடுத்து உடையுடுத்தி மேக்கப் செய்கையில் உற்சாகமாக செல்லும் பின்னணி இசை, அவர் புர்காவைக் கையில் எடுத்த நொடியில் சடாரென்று சோகத்திற்கு மாறுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. இஸ்லாமிய அடிப்படை எதுவென அறிந்து கொள்ளா(மல்) சில முஸ்லிம்களின் இயல்பான நடைமுறையைக் காட்டியுள்ளீர்கள்.

ஆனால், படத்தில் உருவகப் படுத்துவது போன்று புர்காவைக் கையில் எடுக்கும் முஸ்லிம் பெண்களுக்கு எல்லாம் இவ்வாறு சோகம் ஏற்படுகிறதா என்றால் இல்லை ;-)

இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால், புர்கா என்று நாம் புரிந்து வைத்திருக்கும் "கறுப்பு அங்கி" அணியும் முன்னரே, இந்தப் பெண் ஹிஜாபில் (புர்காவில்) தான் இருக்கிறார், தலை முடியை மறைப்பது தவிர... ஏனெனில் பெண் ஒரு குறிப்பிட்ட நிற ஆடையைத் தான் அணிந்து தனது உறுப்புக்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆபாசமின்றி அழகான முறையில் உடற்கூறுகளை மறைக்குமாயின், அவர் அணிந்திருக்கும் சுடிதாரே கூட போதுமானது.

பார்த்துப் பார்த்து அணியும் ஆடை அணிகலன்களை பிறருக்குக் காட்டி மகிழ முடியவில்லையே எனும் எண்ணம் மேலிடாமல் இல்லை. இத்தகைய கட்டுப்பாடுகள் எல்லாமே "ஆபாசப் பார்வை"களைத் தவிர்க்க மட்டுமேயொழிய பெண்களுக்கிடையேயான கூடி மகிழ்தலில் எவ்வித கட்டுப் பாடுகளும் இல்லையே?

அத்துடன், இங்கே சித்தரிக்கப் பட்டுள்ள முகத்தை மறைக்கும் "நிகாப்" (niqab) இஸ்லாத்தில் அவசியம் என வலியுறுத்தப்பட்ட ஒன்று அல்ல. அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. It is an extra degree of observance.

பொன்.சுதா சமூக சிந்தனையுடன், நல்ல சிந்தனைகளை தொடர்ந்து முன் வைப்பதோடு எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்ட பார்வையுடன் நிறுத்தி விடாமல் அதன் முழு பரிணாமங்களையும் அலச வேண்டும் என்பதே என் அவா.

2 comments:

இப்னு ஹம்துன் said...

படத்தில் உருவகப் படுத்துவது போன்று புர்காவைக் கையில் எடுக்கும் முஸ்லிம் பெண்களுக்கு எல்லாம் இவ்வாறு சோகம் ஏற்படுகிறதா என்றால் இல்லை ;-)

இஸ்லாமிய அடிப்படையில் பார்த்தால், புர்கா என்று நாம் புரிந்து வைத்திருக்கும் "கறுப்பு அங்கி" அணியும் முன்னரே, இந்தப் பெண் ஹிஜாபில் (புர்காவில்) தான் இருக்கிறார், தலை முடியை மறைப்பது தவிர... ஏனெனில் பெண் ஒரு குறிப்பிட்ட நிற ஆடையைத் தான் அணிந்து தனது உறுப்புக்களை மறைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆபாசமின்றி அழகான முறையில் உடற்கூறுகளை மறைக்குமாயின், அவர் அணிந்திருக்கும் சுடிதாரே கூட போதுமானது.

Anonymous said...

இதே படத்தின் இறுதி காட்சியில் "சேர்க்கப்பட்ட" சோக இசைக்குப் பிரதியாக ஒரு பக்திப்பாடலின் இசையை ஒலிக்கவிட்டால், அந்த வருந்தும் நடிப்புக்கு மாற்றாக ஒரு பெருமிதப் பார்வையை காட்டிவிட்டால்....


அப்படி யாரும் படம் எடுத்துவிட்டால் ...
அடிப்படைவாதி என்று தான் பேர்வாங்க வேண்டியிருக்கும். முற்போக்கு/பெண்ணுரிமைக்காவலப் பட்டங்கள் கிடைக்காமல் போகும் அபாயம் இருக்கிறது.