Pages

Showing posts with label பெண்ணுரிமை. Show all posts
Showing posts with label பெண்ணுரிமை. Show all posts

25 May 2010

பர்தாவை தடை செய்யலாமா?

உயிர்மை.காம் இணைய இதழில் ஆர். அபிலாஷ் எழுதிய கட்டுரை இது. கட்டுரையின் இறுதியில் புதியகாற்று இதழின் ஆசிரியரும், தாமரை இதழின் இணையாசிரியருமான ஹமீம் முஸ்தஃபாவின் பேட்டி இடம் பெற்றுள்ளதில் சில வரலாற்றுப் பிழைகள் இருந்தாலும் பதிவு மாற்றம் செய்யப்படாமல் இங்கே மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.


- அபூ ஸாலிஹா

31 July 2008

குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்!

சீன மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக் கலையை ஹைதராபாத்தில் உள்ள St. Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.

15 July 2008

சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்


சாதனை படைத்த சிங்கப்பூர் முஸ்லிம் பெண்
ஹிஜாப் பெண்களைச் செயலிழக்கச் செய்கிறது, அவர்களது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது போன்ற அரதப் பழசான எதிர்மறைச் சிந்தனைகள் இத்தகைய செய்திகள் மூலம் தகர்த்தெறியப் படுகின்றன.

15 June 2007

திருக்குர்ஆனில் பெண்கள்!

ஆண்கள் உலகில் பெண்கள் காலாகாலமாக பல கோணங்களில் பார்க்கப்படுகிறார்கள். விவாதிக்கப்படுகிறார்கள்.

பெண்களை மிக உயர்ந்த உன்னதப் படைப்பாக பார்த்து கவுரவிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை மிக மட்டரகமாக பார்த்து இழிவுபடுத்தும் ஆண்கள் மறுபுறம்.

பெண்களை தாய்மையுடன் பார்த்து மதிக்கும் ஆண்கள் ஒரு புறம் என்றால், அவர்களை வெறும் பாலியல் இயந்திரமாக பார்த்து பழகிப் போன ஆண்கள் மறுபுறம்.

25 November 2006

சகோதரி யுவான் ரிட்லியின் கட்டுரை!

தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...

"நான் தாலிபான்களால் சிறை பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.

15 October 2005

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 2

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.


பெண்களைப் பார்த்து ஆண்கள் ரசிப்பது போலவே பெண்களும் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள் என்று சிலர் கூறுகின்றனர். அந்த வாதத்தை உண்மையென்று ஒப்புக் கொண்டாலும் கூட ஹிஜாபை மறுப்பதற்கு அவ்வாதம் வலுவானதன்று.


ஏனெனில் ஆண்கள் பெண்களை ரசித்து விட்டுப் பெண்களின் விருப்பமில்லாமலேயே பலவந்தமாக அவர்களை அனுபவித்து விட முடியும். பெண்கள் ஆண்களை ரசிப்பதாகவே வைத்துக் கொண்டாலும், ஆண்கள் விரும்பாத வரை பெண்களால் ஆண்களைப் பலவந்தமாக அனுபவித்து விட முடியாது.


இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. அனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.


அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.


ஹிஜாபைக் குறை கூறுவோர் அதைச் சிந்திப்பதில்லை.


பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்குவாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். "இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச்சட்டம் இங்கும் வேண்டும்'' என்றெல்லாம் கூறுகின்றனர்.


ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.


பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது?


பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா? பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் என்?


பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும்போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?


பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?
எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.


இவ்விடத்தில் எழும் மற்றொரு சந்தேகத்தை விளக்கியாக வேண்டும்.
பெண்களின் முழு உடலும் ரசிக்கத்தக்கதாக இருக்கும்போது முகத்தையும், கைகளையும் கூட மறைத்துத்தானே ஆக வேண்டும் என்ற கேள்வி நியாயமானதுதான். அதைவிட நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் அந்த இரண்டு உறுப்புகளையும் மறைக்காமலிருக்கச் சலுகை வழங்கியிருக்கின்றது.


ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக்குறைவே. பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்பு, பாதிக்கப்படும் என்று அஞ்சுவதுதான். இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இதுதான் காரணம்.

முகத்தையும் ஒரு பெண் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம். தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும்போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள். எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும். முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்.


ஆண்கள் கூட முகமூடி அணிந்து எவரும் கண்டு கொள்ளாத வகையில் ஆடை அணிய அனுமதிக்கப்பட்டால் அவனது சுயரூபமும் அப்போது வெளிப்படும். இறையச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தைப் பற்றிய அச்சமாவது ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கத் தூண்டவேண்டும்.

மேலும் முகத்தையும் மறைக்கக் கட்டளையிட்டால் முஸ்லிம் பெண்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத பெண்களும் கூட தவறு செய்யும் போது முகத்தை மறைத்துக் கொள்ளும் நிலைமை ஏற்படும். அப்படியும் சில பகுதிகளில் நடப்பதை நம்மால் அறிய முடிகின்றது.

பெண்கள் மட்டுமின்றி தவறான செயல்களில் ஈடுபடும் ஆண்கள் கூட பெண்களைப் போல் முகம் மறைத்து பல தவறுகளைச் செய்யக்கூடிய நிலமையும் ஏற்படலாம்.

எனவே தான் பெண்களின் முகம் ரசிக்கத்தக்கதாக இருந்தும், மிக மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்காகத் தான் முகத்தை மறைக்குமாறு இஸ்லாம் கட்டளையிடவில்லை.

நபித்தோழியர் எவரும் தாங்கள் யார் என்று அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைத்துக்கொண்டதில்லை என்று வரலாற்று நூற்களில் காண்கிறோம்.

கொடுக்கல், வாங்கல் இன்ன பிற அலுவல்களில் ஈடுபட கைகள் மிகவும் அவசியம். அவற்றையும் மறைத்துக்கொண்டால் எந்தக் காரியத்திலும் பெண்கள் ஈடுபட இயலாத நிலை ஏற்படும். அதனால்தான் மணிக்கட்டு வரை கைகளை மறைத்துக் கொண்டு மற்ற பகுதியை மட்டும் மறைக்காமலிருக்கலாம் என்று இஸ்லாம் அனுமதிக்கின்றது.

இதைத் தவிர மற்ற பாகங்கள் கண்டிப்பாக ஆண்களின் ஒழுக்கத்திற்குச் சவால் விடக்கூடியவை. அப்பாகங்களைத் திறந்து காட்டுவதால் எந்தப் பயனுமில்லை. அன்னியப் பெண்களைத் தடையின்றிப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான ஆசை கொண்டவர்களே பெண்களை அரை நிர்வாணத்துடனும் கால் நிர்வாணத்துடனும் நடைபோட அனுமதி கேட்கின்றனர்.

முகமும், கைகளும் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவது பெண்களின் முன்னேற்றத்துக்கு தடை எனக் கூறுவதும் ஏற்கக்கூடிய வாதமன்று.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் ஆடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக்கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

ஆண்கள் குறைவான அளவு மறைத்தாலும் கேடுகள் ஏற்படாது. அவ்வாறு இருந்தும் ஆண்கள் நிறைவாக ஆடை அணிந்து முன்னேறுகிறார்கள். குறைவான அளவு ஆடையால் அடுத்தவரைப் பாதிக்கும் உடலமைப்புக் கொண்ட பெண்கள் நேர்மாறாக நடப்பதுதான் நமக்கு வியப்பாகவுள்ளது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.
கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது.

14 October 2005

ஹிஜாப் பற்றி PJ - பாகம் 1

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் அது "ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.
"ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!'' என்று முற்போக்குவாதிகளும் அறிவுஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் அந்தப் போலித்தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.
"ஹிஜாப்" என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இதுபற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம்

ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். அனால் சமத்துவம் பேசும் இவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை, பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். இதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை எதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் அந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல்மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை எதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் அந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் அவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் அந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே உழைக்கும் வர்க்கத்துப் பெண்கள் அவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப்படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.
அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட அந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. என் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே அதை அனுமதிக்க மாட்டார்கள்.
"ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்'' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.
ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஒரளவுக்கு அவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஏனெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு யாருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு

இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.
ஆண்கள் பெண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும், பெண்கள் ஆண்களை ரசிக்கக் கூடியவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஆயினும் இருபாலரின் ரசனைகளும் வித்தியாசமானவை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. அதன் காரணமாகத்தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு அதுதான்.
பெண்களின் ரசனை அத்தகையது அன்று. ஆண்களின் உடலுறுப்புக்களின் கவர்ச்சியில் அவர்களின் ரசனை செல்வது கிடையாது. அதன் காரணமாகத் தான் ஆண்கள் எவ்வளவு குறைந்த அளவு ஆடையுடன் காணப்பட்டாலும் பெண்கள் பார்த்து ரசிப்பதில்லை. திரும்பப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதில்லை.
ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் ஆண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக ஆக்க முடிவதில்லை என்பதிலிருந்தும் கூட இதை அறியலாம்.
ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே இவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.
அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.
பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

30 September 2005

அண்ணா பல்கலைக்கழகத்தின் உடை கட்டுப்பாடு


கல்லூரிக்கு வரும் பெண்கள் டி-ஷர்ட், ஜீன்ஸ், குட்டைப்பாவாடைப் போன்ற உடைகளை உடுத்தி வரக் கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கட்டுப்பாடு விதித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்ணுரிமை என்றால் என்னவென்றே விளங்கிக் கொள்ள சக்தியில்லாதவர்கள் வழக்கம் போல தங்கள் வார்த்தை ஜாலங்களால் துணைவேந்தர் உட்பட அந்தக் கருத்தில் இருப்பவர்களை சாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய கருத்துக்கு இஸ்லாமிய சாயம் கூட பூசப்பட்டது.


மத நம்பிக்கையை ஒருபக்கம் ஒதுக்கி விட்டு இந்த பிரச்சனையை யோசிப்போம். ஒரு பல்கலை கழகத்தின் துணைவேந்தர் 'பெண்கள் ஆடை விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொள்ள வேண்டும்' என்ற கருத்தை ஏன் வெளியிட வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

உயர்கல்வியும் அது போதிக்கப்படும் வளாகமும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் - துணிவையும் - சிந்தனைத் தெளிவையும் ஏற்படுத்தும் இடமாகும். அத்தகைய இடத்திலிருந்து மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் ஒரு கல்வியாளர் இத்தகைய கருத்தை முன் வைக்கிறார் என்றால் கல்வி ஏற்படுத்த வேண்டிய மாற்றத்திற்கும் மாணவியர் உடுத்தும் உடைக்கும் சம்பந்தமில்லை என்பது தெளிவாகின்றது. சில மாணவியர் தங்கள் தன்நம்பிக்கைக்கு உடையையே அடையாளமாக்கும் போக்கை கையாள்கிறார்கள். இந்த போக்கை அவர்கள் தங்கள் கல்வி மற்றும் கல்வியாளர்களிடமிருந்து பெறுவதை விட 'அழகித் தேர்வு' என்ற பாலியல் நுகர்வு இடங்களிலிருந்தே பெறுகிறார்கள்.

உடம்பின் முக்கால் பாகம் தெரியக் கூடிய அளவிற்கு துண்டு உடையுடன் அழகிப்போட்டிக்கான மேடைகளில் வளைந்து, நெளிந்து நடந்து தங்கள் சதை பிடிப்புகளுக்கு சர்ட்டிஃபிகேட் வாங்கும் சில வியாபார பெண்கள் 'வெற்றிவாகை? சூடியவுடன் முதலில் பேசுவது தனது 'தன்னம்பிக்கை'யைப் பற்றிதான். 'நாங்கள் 'சாதிக்க முடியும்' என்ற தன்னம்பிக்கை மூலதனமாகக் கொண்டே வெற்றிப் பெற்றுள்ளோம்' என்று வாய் கூசாமல் கூறுவார்கள். அந்த செக்ஸ் வியாபார குறியீடுகளின் உடம்பில் பார்வையை மேயவிடும் வக்கிரம் மிக்க நடுவர் கூட்டம் இந்த தன்னம்பிக்கையை ஆஹா.. ஓஹோ.. என்று பாராட்டி மார்க் போடும்.

சென்சார் தடைகளின்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் இத்தகைய போட்டிகளும், கருத்துக்களும் கல்லூரி மாணவிகளை வெகுவாக பாதிக்கின்றது. அதனுடைய பிரதிபளிப்புதான் இத்தகைய ஆடைக் குறைப்பு கலாச்சாரமாகும்.

கல்வி முறைக்கும், தற்போது ஏற்பட்டு வரும் கலாச்சார மாற்றங்களுக்கும் மத்தியில் பெரிய வேறுபாடு இருப்பதை தெளிவாக உணரும் தருணம் இது.

கல்வி ஏற்படுத்த வேண்டிய சமூக மாற்றங்களை விட இத்தகைய மீடியாக்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பெண்ணிய மாற்றங்களே இன்றைக்கு நாம் எதிர்கொள்ள வேண்டிய பெரும் சவாலாக இருந்துக் கொண்டிருக்கிறது.

குறை உடைகளுடன் காட்சியளிக்கும் மாணவிகளிடம் நாம் கேட்க விரும்பும் கேள்விகள் சில உண்டு.இந்த குறை உடைகளின் மூலம் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

தேவையான அளவு உடை உடுத்தி இருக்கும்போதே ஆண்களுக்கு பெண்கள் பெரும் சவாலாக அமைகிறார்கள் என்றால் இந்த குறை உடைகளால் ஆணை தவறான வழிகளுக்கு கூடுதலாக தூண்டுவதில் உங்களுக்கு என்ன வெற்றி கிடைக்கப்போகிறது? தொடை - மார்புப் பகுதிகள் - முதுகு என்று முக்கியமாக மறைக்க வேண்டிய பல பகுதிகளை திறந்து பள்ளிக்கு செல்கிறீர்களே, உடன் படிக்கும் மாணவர்கள் பிற பள்ளி, கல்லூரி மாணவர்கள் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கும் போது எப்படி கல்வியில் முன்னேறுவார்கள்? ரேகிங், ரேப்பிங், ஈவ்டீஸிங் போன்ற பெண் விரோத கொடுமைகள் நடப்பதற்கு பாலியலைத் தூண்டும் உங்கள் உடைகள் முக்கிய காரணமாவதை உங்கள் அறிவு ஒத்துக்கொள்ள மறுப்பதேன்?

'அரை குறை உடைகள் தான் சுதந்திரம், இப்படி உடை உடுத்தினால் தான் சாதிக்க முடியும்' என்று நீங்கள் கருதினால் முழு அளவு உடை உடுத்தி சாதிக்கும் பெண்களையும், குறை உடைகளை அறவே உடுத்தாமல் உலகை கலக்கிக் கொண்டிருக்கும் ஆண்களையும் எந்த லிஸ்டில் சேர்ப்பது? நீங்கள் திறந்து வைத்திருக்கும் பகுதிகள் கவர்ச்சிப் பகுதிகள் அல்ல என்று சொல்ல வருகிறீர்களா..?

நீங்கள் கற்கும் கல்வியில் எந்தப் பாடம் இத்தகைய உடைகளை 'சுதந்திரம்' என்று கூறி உங்களை ஊக்குவிக்கிறது?. இந்தக் கேள்விகளுக்கு 'சுதந்திரம்' பேசும் மாணவிகள் பதில் சொல்ல வேண்டும்.

துணைவேந்தரின் அறிவிப்புப் பற்றியும் மாணவிகள் அணியும் இத்தகைய உடைகள் பற்றியும் சில பெண்களின் கருத்தை 'தினமணி'யிலிருந்து கொடுக்கிறோம்.

கவர்ச்சி உடையணிந்து கலாசாரத்தைக் கெடுக்கும் கல்லூரி மாணவிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியே! பழக்க வழக்கங்களையும், பண்பாடுகளையும் மாற்றுவது மாடர்ன் டிரஸ். ஆடை குறைப்போடு கூடிய மாடர்ன் டிரஸ், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தை சீர்கெடச் செய்துவிடும். - கவிஞர் அருணா ராஜேந்திரன், கூத்தூர்.

மாடர்ன் டிரஸ் அணிவது நாகரிகமாய் இருந்தாலும் தமிழருடைய பண்பாடு கெடுகிறது. இது கலாசாரத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். இதைத் தடை செய்வது ஈவ்-டீஸிங்கை தடுக்கும். ஆகவே மாடர்ன் டிரஸ் அணியத் தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதாகும். - கே.பிரேமா வி.கே.புரம்

மாடர்ன் டிரஸ் அணிவது, கல்லூரி இளைஞர்களிடையே ஈவ்-டீஸிங் செய்ய தூண்டுகோலாக அமையும். புடவை கட்டிக்கொண்டு சென்றால் அவ்வளவாக ஈவ்-டீஸிங் இருப்பதில்லை. எனவே கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ்க்கு தடை விதித்தது சரியே. - சி.எஸ். பத்மாவதி. குடியாத்தம்

ஆடைகள் என்பது மனித சமுதாயத்துக்கு மதிப்பு, மரியாதை தரவேண்டும். எனவே கண்ணியமாக உடை உடுத்துவது அவசியமாகும். ஆடை அணிய வேண்டிய முறை குறித்து குர்ஆனில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மாணவிகளுக்கும் பொருந்தும். - சல்மா பேகம், சிங்கபெருமாள் கோவில்

மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் அருவருக்கத்தக்க உடைகள் அணிவதைத் தடை செய்ய வேண்டும். மாணவிகளுக்கு தடை விதித்திருப்பதைப் போல, மாணவர்களும் அநாகரிகமாக உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும். இதைச் செயல்படுத்துவது பெற்றோர்களின் முதல் கடமை. - யூசிமா, தென்கரை பெரியகுளம்

கல்லூரி மாணவிகள் மாடர்ன் டிரஸ் அணிவது தவறல்ல; மாடர்ன் டிரஸ் என்ற பெயரில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என அரைகுறை ஆடைகளுடன் வளைய வருவதுதான் தவறு. ஆடை என்பது பண்பாட்டையும், கலாசாரத்தையும் உணர்த்துவது. அதற்காக ஒன்பது கஜ புடவைகளை சுற்றிக்கொண்டு வர வேண்டியதில்லை. அணியும் ஆடை ஒருவருக்கு கம்பீரத்தையும், மனதில் மரியாதையையும் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். - கு.பெருந்தேவி, சென்னை

உடலை மறைப்பதற்காகத்தான் உடை உடுத்துகிறோம். உடல் வெளியில் தெரியும்படி பெண்கள் உடை அணிவதால், ஆண்கள் தவறு செய்யும் வாய்ப்பு ஏற்படுகிறது. உள்ளத்திலிருந்து வரவேண்டிய காதல், உடல் கவர்ச்சியிலிருந்து வருகிறது. முன்பெல்லாம் தவறு ஏற்படுவது அபூர்வமாக இருந்தது. இப்போது நடக்கும் தவறுகளுக்கு பெண்கள் அணியும் உடையே முக்கிய காரணமாக உள்ளது. சேலை கட்டுவதுதான் சிறந்தது, பண்பாடும் கூட. - வி.வேலாமுத முத்தம்மாள், காந்தி சேவா சங்கம், சத்திரப்பட்டி

கல்லூரிகளில் மாடர்ன் டிரஸ் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பது சரியானதுதான். மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் ஆபாசமாக உடை அணிகின்றனர். இந்த உடையுடனே பொது இடங்களுக்கும் வருகின்றனர். ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு இது சமம். ஸ்லீவ்லெஸ் மேலாடையும், டைட் ஜீன்ஸம் ஆண்களை படுத்துவது நிஜம். - விஜயஸ்ரீ இராஜேந்திரன், மொரட்டுப்பாளையம்

நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய கலாசாரம் தலைவிரித்தாடுகிறது. கல்லூரிக்குச் செல்வது படிப்பதற்காகத்தான். ஆடை அலங்காரத்தை ரசிப்பதற்காக அல்ல. சினிமா மோகத்தால், திசை மாறி நடைமுறைக்கு ஒத்துவராத ஆடைகளை அணிய தடை விதிப்பது தவறில்லை. பள்ளிகள் போன்று சீருடை கூட அறிமுகப்படுத்தலாம். நமது கலாசாரத்தை கட்டிக்காக்க இது உதவும். - ச.ஜெயஸ்ரீ, நங்கநல்லூர்

உடைக்கட்டுப்பாட்டை வரவேற்க்கும் மாணவர்களும், பெற்றோரும்



நன்றி: இதுதான்இஸ்லாம்.காம்