Pages

18 April 2009

துபையில் விற்பனையாகும் ஹிஜாப்களில் புற்று நோய் இரசாயனங்கள்!


துபையில் விற்பனையாகும் ஹிஜாப்கள் (கேன்ஸர்) புற்று நோயை ஏற்படுத்தக் கூடியவை என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. இது UAE யின் கல்ஃப் நியூஸ் செய்தியில் வெளியாகியுள்ளது.

இஸ்லாமிய உடையான ஹிஜாப் (Abayas and Shailahs) முஸ்லிம் பெண்கள் பரவலாக அணியக்கூடிய ஒன்றாகும். சமீபத்தில் துபையின் மத்திய ஆய்வுக்கூடமான (DCL) ஒரு ஆய்வினை மேற்கொண்டது. இதில் ஹிஜாப் தயாரிக்கப் பயன்படுத்தப் படும் துணியில் நிறத்தினைத் தருவதற்காக பயன்படுத்தப் படும் இரசாயனப் பொருட்களில் கார்ஸினோஜென்ஸ் (carcinogens) என்ற நச்சுத் தன்மை வாய்ந்த இரசாயனம் கலக்கப் பட்டிருப்பதும் அனுமதிக்கப் பட்ட அளவை விட கூடுதலாக உலோகக் கலவைகள் இவ்வகை நெசவில் பயன்படுத்தியிருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

DCL இல் பணிபுரியும் ஸோஃபியா காஸிம் என்ற பெண் ஆய்வாளர் கல்ஃப் நியூஸ் பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில் இந்த திடுக்கிடும் உண்மை வெளியாகியுள்ளது. இந்த ஆய்வினைத் தொடர்ந்து துபையில் உள்ள பெரும்பாலான ஹிஜாப் நிறுவனங்கள் தயாரிக்கும் உடைகள் கார்ஸினோஜென்ஸ் தனிமங்கள் உள்ளனவா என்ற ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றன. இத்தகைய ஹிஜாபை அணிவதால் உடலில் ஏற்படும் இராசயப் மாற்றங்கள் மற்றும் பக்க விளைவுகளை ஆய்வு செய்தபின் இந்த அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

இச் செய்தி கண்டு ஹிஜாப் அணியும் பெண்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது DCL. சந்தையில் விற்கும் அனைத்து ஹிஜாப்களிலும் இத்தகைய இரசாயனங்கள் இல்லை என்றும் பரிசோதனையில் சிக்கிய நிறுவனங்களின் அனைத்துத் தயாரிப்புகளும் உடனடியாக அகற்றப் பட்டுள்ளது என்றும் DCL தெளிவுபடுத்தியுள்ளது.

புற்றுநோயாளிகளுக்கான சங்கத்தில் (President of the Friends of Cancer Patients Society) முக்கியப் பொறுப்பினை வகிக்கும் டாக்டர் ஸா-ஸன் அல் மஹ்தி, இவ்விஷயத்தில் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். ஆச்சரியமான விஷயம் என்னவெனில் நாம் எத்தகைய உணவை உண்ண வேண்டும், எத்தகைய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், புகை பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்களைக் கைவிட வேண்டும் என்று தினமும் அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் எத்தகைய உடையை அணியவேண்டும் என்பதை மறந்து விட்டோம் என்றார்.

இத்தகைய ஹிஜாபினைத் தயாரித்து வெளியிட்ட நிறுவனங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பது இன்னும் வெளியாக வில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் துணிகளில் பயன்படுத்தும் இத்தகைய இரசாயனப் பொருட்கள் மீதான தனிச் சட்டம் ஏதுமில்லாததால் இதற்கான உடனடி தீர்வை அறிவிக்க அரசினால் இயலவில்லை என்றார் துபை ஹாஸ்பிடல் நிறுவனத்தில் oncology துறைத் தலைவரான டாக்டர் ஃபரீத் கலீஃபா.

செயற்கை நிறமிகள் ஏற்படுத்தும் ஆபத்து என்ன?
நெசவின் போது பயன்படுத்தப்படும் சில செயற்கை நிறமிகள் ஆண் விதைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் புற்று நோய்களையும் மற்றும் சில நிறமிகள் பித்தப்பை மற்றும் சீறுநீரகப் பை போன்றவற்றில் புற்று நோயை உருவாக்கவல்லவை என்று அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

நெசவுப் பொருட்களில் சேர்க்கும் நிறமிகளிலும் இராசயப் பொருட்களிலும் உள்ள carcinogenic ஆபத்துகளைப் பற்றி வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (WHO) பட்டியலை வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை:
Direct Blue 6, Direct Black 38 மற்றும் Direct Brown 95 போன்ற பென்சீன் (benzidine) ஐ மூலப் பொருளாகக் கொண்டு உருவாக்கப் படும் நிறமிகள் அனைத்துமே ஆபத்தானவை ஆகும். முக்கியமான விஷயம் என்னவெனில் இவை எல்லாம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முற்றிலுமாகத் தடை செய்யப் பட்ட ஒன்றாகும். WHO வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறமிகள் மற்றும் அவற்றின் குணாதிசியங்கள் இடம் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

carcinogens என்ற நச்சுப் பொருள் நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களில் விழிப்புணர்வு எந்த அளவிற்கு உள்ளது இவற்றைக் கண்டுபிடித்தலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் என்ன? என்பதே எஞ்சி நிற்கும் கேள்வியாக உள்ளது.

No comments: